மான்செஸ்டர்: வெளிநாட்டு கிரிக்கெட் தொடரான ஹண்ட்ரட் தொடரில், லண்டன் ஸ்பிரிட் அணிக்காக விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.

சமீபத்தில், இந்திய கிரிக்கெட்டிலிருந்து தோனி தனது ஓய்வை அறிவித்த நிலையில், இந்த அழைப்பை விடுத்துள்ளார் ஷேன் வார்ன்.

ஆனால், தற்போதைய பிசிசிஐ விதிமுறைப்படி, ஒரு இந்திய வீரர் வெளிநாட்டு தனியார் அமைப்புகளின் கிரிக்கெட் தொடர்களில் ஆட வேண்டுமெனில், அவர் இந்தியா தொடர்பான போட்டிகள் அனைத்தையும் துறக்க வேண்டும். எனவேதான், எந்த இந்திய வீரர்களாலும் வெளிநாட்டுத் தொடர்களில் ஆட முடிவதில்லை.

ஆனால், அதற்கான அனுமதியை வழங்க வேண்டுமென்ற குரல்கள், வீரர்கள் மத்தியிலிருந்து அவ்வப்போது ஒலித்துக்கொண்டுதான் உள்ளன.

ஷேன் வார்ன் கூறியுள்ளதாவது, “அடுத்த ஆண்டு தோனியை லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கொண்டுவர வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன். தோனி, நீங்கள் ஐபிஎல் தொடருக்கு வெளியே ஆட விரும்பினால் லண்டன் ஸ்பிரிட் அணி உங்களை வரவேற்கிறது. நான் உங்களுக்கான தொகைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றுள்ளார் ஷேன் வார்ன்.