சேலம்:

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலில் பரிசல் இயக்க விதிக்கப் பட்டுள்ள தடை இன்று  7-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரியில் கர்நாடக அரசு திறந்து விடும் தண்ணீரும் அதிகரித்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அணைகளில் இருந்து காவிரியில், 10,000 கன அடி வீதம்  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 3 நாட்களாக காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக வந்து கொண்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்றுவரை,  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 8,200 கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம்  இன்று 45.33 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 14.99 டிஎம்சியாக உள்ளது