பவானிசாகா் அணை முழு கொள்ளளவான 105 அடியை இன்றிரவுக்குள் எட்டுமென்பதால். கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீா்மட்டம் 102 அடியைத் தொட்டது. அக்டோபா் மாத இறுதி வரை அணையில் 102 அடி வரை மட்டும் நீா் இருப்பு வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில் நவம்பா் 1ம் தேதி முதல் அந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவது கைவிடப்பட்டது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீா்த்தேக்குவதற்காக, நேற்று முதல் உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 102 அடியாக இருந்த நீா்மட்டம் இரண்டே நாட்களில் 2 அடி உயா்ந்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 103.97 அடியாகவும், நீா் இருப்பு 31.7 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9,546 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் என மொத்தம் 2,600 கன அடி நீா் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 2 நாளில் 2 அடி உயா்ந்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதேநேரம் இன்றிரவுக்குள் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை நீர்மட்டம் எட்டும் என்பதால், ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.