சென்னை
சென்னை மக்களிடையே தண்ணீர் லாரிகளுக்கு இருந்த தேவை தற்போது குறைந்துள்ளது.
சென்னை நகரில் சமீபத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்களுக்கு வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் நீர் விநியோகம் அளிக்க முடியாத நிலைக்கு சென்னை குடிநீர் வாரியம் தள்ளப்பட்டது. அதையொட்டி சென்னை குடிநீர் வாரியம் ஆன்லைன் மூலம் பதிவோருக்கு லாரிகளில் குடிநீர் அனுப்பி வைத்தது. இந்த குடிநீர் லாரி 6000 லிட்டர் கொள்ளளவுக்கு ரூ. 475 மற்றும் 3000 லிட்டருக்கு ரூ. 400 என வசூலிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த வாரம் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குப் பதிவு செய்வோருக்கு 48 மணி நேரத்துக்குள் குடிநீர் அனுப்ப உள்ளதாகச் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்தது. தற்போது சென்னையில் மழை பெய்த பிறகு குடிநீர் பதிவு செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது குறித்து சென்னைக் குடிநீர் அதிகாரி ஒருவர், “தற்போது குடிநீர் வேண்டி கோரிக்கை விடுப்பவர்கள் பதிவை ரத்து செய்ய முடியாது என்பதால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வழியில்லை. இதனால் தேவையற்ற பதிவுகள் குறைந்துள்ளது.
மேலும் தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக லாரிக் குடிநீருக்கு பதிவு செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த அளவுக்கு யாரும் பதிவு செய்வது இல்லை. எனவே வீடுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய குடிநீரை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.