செங்குன்றம்: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி நிரம்பி வருவதால், உபரி நீர் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவிடப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

நிவர் புயலைத்தொடர்ந்து, புரெவி புயல் காரணமாக பெய்துவரும் கனமழை காரணமாக, ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பல ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 21 அடி உயரம்கொண்ட புழல் ஏரியில் தற்போது நீர் மட்டம் 19அடியை கடந்துள்ளதால், ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பம என்றும், அது  பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  புழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் காரணமாக, வடசென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் துணைக்கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஒட வாய்ப்பு உள்ளது. இதனால், கால்வாய் கரையோ மக்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.