சென்னை: கடந்தவாரம் கரையை கடந்த நிவர் புயல் காரணமாக, சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்ட நிலையில், புறநகர் பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாத சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில்,  மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்பட பல பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை  மிரட்டிய நிவர் புயல் கடந்த 26ந்தேதி அதிகாலை புதுச்சேரி கரையை கடந்தது. இதன் காரணமாக,  கடலூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதம் அடைந்தது. ஆனால், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னையின் பல தாழ்வான  பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழையால் ஏற்பட்ட தண்ணீர் இன்னும் வடியாக நிலை தொடர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.