சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை  காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.  கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் உபரி நீர்,,  அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் அளவு வினாடிக்கு 45ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  3,625 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி அளிவல், தண்ணீர் வரத்து வினாடிக்கு  30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று (7ங்தேதி)  காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.44 அடியாகவும், நீர்இருப்பு 28.99 டி.எம்.சி.யாகவும்  இருந்தது.  காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தற்போது கர்நாடக அணைகளில் இருந்து  60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

தமிழக – கர்நாடக எல்லையான புலிக்குட்டிக்கு தற்போது 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 70.05 அடியாக உயர்ந்து  உள்ளது. அணைக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 32.74 டி.எம்.சி தண்ணீர் தற்போது மேட்டூர் அணையில் இருப்பு உள்ளது.