சென்னை,

ஜெயலலிதா சமாதியில், மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டும்  குழுவாக வருபவர்களை தடுத்து நிறுத்தியும் போலீசார் கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி மாணவர்கள் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை அகற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால், மாணவர்கள் தாங்கள்,  தியானத்தில் இருப்பதாக கூறி அமர்ந்து உள்ளனர். மற்றவர்களுக்கு அனுமதி அளித்ததுபோல தங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது.

50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்போது போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் அங்கே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று  போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு காரணமாகவும், இதன் காரணமாக மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் மாணவர்கள், மாணவிகள் சிலர் ஜெயலலிதா சமாதிக்கு வந்து, சமாதி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.