சென்னை

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகத் தீர்மானம்  இயற்றவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் தற்போது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தமிழகத்தில் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் னித்து போட்டியிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.   இந்த செய்தியை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானம் இயற்றவில்லை என தெரிவித்துள்ளது.  மேலும் தீர்மானம் இயற்றப்பட்டதாக தகவல் வெளியிட்ட சிவகுமாருக்கு விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.