சென்னை: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியானது, அதிமுகவிற்கு ஒரு திருஷ்டிப் பொட்டாய் ஆகிப்போனது என்று கூறியுள்ளார் துணை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம்.

சட்டப்பேரவையில் பேசும்போது அவர் கூறியதாவது, “கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல தேர்தல்களில் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளை குவித்து வந்தோம். உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உட்பட எதையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த 1984ம் ஆண்டிற்கு பிறகு, ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்த சாதனையையும் செய்தோம். ஆனால், அப்படி வெற்றிமேல் வெற்றிபெற்ற எங்களுக்கு இந்த 2019 மக்களவைத் தேர்தல் ஒரு திருஷ்டிப் பொட்டாய் மாறிப்போனது. தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் எங்களுக்கு மக்கள் திருஷ்டி கழித்துள்ளார்கள்.

ஆனாலும், தேனி தொகுதியில் நாங்கள் வென்றிருக்கிறோம். எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுகளைக் கண்டு நாங்கள் வருந்தவில்லை” என்று பேசியுள்ளார் துணை முதல்வர் பன்னீர் செல்வம்.