போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் மூண்டது.  இந்த நிலையில்  கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 11 பேர் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பி.ராம்நாத், “ 144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம். பின்பு, போராட்டக்காரர்களுக்கு  அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம்” என்றார். மேலும், “தற்போது ஸ்டெர்லைட் ஆலை வழக்கம்போல் இயங்கி வருகிறது.  நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.