சிட்னி: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ரோகித் ஷர்மா மற்றும் குவின்டன் டி காக்கையே திணறடித்த என்னால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் நெருக்கடியை தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற ஷமி, 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம், சூப்பர் ஓவர்களிலும் சிறப்பாக செயல்பட்டார் ஷமி.

இந்நிலையில், ஷமி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தொல்லை தருவார் என்று கவாஸ்கரும் கணித்துள்ளார்.

இதனையடுத்து, ஷிமி கூறியுள்ளதாவது, “கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் நான் இந்த ஐபிஎல் சீசனில் செயல்பட்ட விதம் எனக்கு மிகுந்த நம்பி்க்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. என்னை சரியான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். என் தோள்மீதிருந்த சுமை குறைந்தது போன்று உணர்கிறேன்.

அடுத்துவரும் ஆஸ்திரேலியத் தொடரை எந்தவிதமான நெருக்கடியும் இ்ல்லாமல் நான் தயாராகுவேன். இப்போது நான் மிகவும் தன்னம்பிக்கையுள்ளவராக உணர்கிறேன். லாக்டவுன் காலத்தில் நான் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்தேன். ஐபிஎல் போட்டித் தொடர் விரைவில் வந்துவிடும் என்பதால் என் உடற்பயிற்சிையயும் பந்துவீச்சுப் பயிற்சியையும் கைவிடாமல் இருந்தேன்.

ஆஸ்திரேலியாவில் முதலில் ஒருநாள், டி20 தொடருக்கு பின் பிங்க் பந்தில் ஒரு டெஸ்ட், சிவப்பு பந்தில் டெஸ்ட் போட்டிகள் என விளையாடப் போகிறோம். சிவப்பு பந்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். சரியான லைன் லென்த்தில் பந்துவீசிவிட்டால் எந்த விதமான போட்டியிலும் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இதற்கு முதலில் நம்மிடம் கட்டுப்பாடு அவசியம். ஒருநாள், டி20 போட்டிக்கு பந்துவீச்சு சிறப்பாக அமைந்துவிட்டாலும், டெஸ்ட் போட்டிக்காக தனியாக நாம் பயிற்சி எடுக்க வேண்டும். இருவிதமான போட்டிகளிலும் ஒரே லைன், லென்த்தில் பந்துவீச முடியாது. நம்முடைய உத்தியை மாற்ற வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித் போன்ற வீரர்கள் பற்றியெல்லாம் கவலையில்லை. நம்மிடம் திறமையான பேட்ஸ்மென்கள், பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். கடுமையாக வலைப்பயிற்சி எடுக்கிறார்கள். உலகத்தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும்கூட சரியான பந்துவீச்சை செலுத்தினால் விக்கெட்டை இழந்துவிடுவார்” என்றுள்ளார் அவர்.