சென்னை:

அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கிளிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை பெறுவதற்காக பிரமான பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அடுத்ததாக அதிமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு வரவேற்பு அளித்து இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது ரகசியம் கூட்டம் அல்ல.

அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். இரட்டை இலையை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராகவுள்ளோம். பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினமா செய்துவிட்டதாக கூறுவது தவறு. சசிகலா, தினகரன் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தனியாக வீட்டில் ஆலோசனை நடத்திய உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமைச்சர்களும், விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் தங்கமணி வீட்டிற்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உடன்பாடு உண்டு என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.