“புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம்” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்ட பேரவையில், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது  அவர் பேசியதாவது:

”புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து,மாநில அரசுக்கு எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை.

தவிர, இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாது. மாநில அரசு அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் புதுவையில் மத்திய அரசு நிறைவேற்ற முடியாது” என்று ஆவேசமாக தெரிவித்தார்.