பிரிஸ்பேன்: முக்கியமான தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; ஆனால் இந்தியாவோ அத்தகைய தருணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே.

அதேசமயம், தான் கேப்டன் பதவியில் தொடர விரும்புவதாகவும், செய்து முடிக்கப்படாத பணிகளை நிறைவுசெய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது, “பேட்டிங் செய்தல், பந்து வீசுதல், பீல்டிங் செய்தல் என்று, களத்தில் எங்களுக்கு கிடைத்த சில முக்கியமான தருணங்களை நாங்கள் தவறவிட்டோம். ஆனால், இந்தியர்கள் அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய நேரத்தில் விக்கெட்டை இழந்தோம். விக்கெட் எடுக்க வேண்டிய நேரத்தில் தவறிழைத்தோம். விளையாட்டு வீரர் என்ற முறையில், நாம் நினைப்பது பெரும்பாலான நேரங்களில் நடப்பதில்லை.

நான் செய்ய வேண்டிய பணி இன்னும் இருக்கிறது. எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர விரும்புகிறேன்” என்றுள்ளார் 36 வயதான டிம் பெய்னே.