திருச்சி:
எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
அய்யாக்கண்ணு தலைமையில் டில்லியில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்குபெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மர்மநபர்கள் சிலர் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு, ” டில்லியில் போராடினால் லாரி கார் ஏற்றி கொன்றுவிடுவோம். அரசுக்கு எதிராக போராட உங்களை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தூண்டி விடுகிறார்கள்.
சென்னைக்கு வந்து போராடு… எடப்பாடி வீட்டுக்கு அம்மணமா போங்க. ஏன் டில்லியில மத்திய அரசுக்கு எதிராக போராடுறீங்க என்று தினமும் அலைபேசியில் சிலர் மிரட்டுகிறார்கள்.
இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்” எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் காரணம்” என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.