டில்லி:

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுமையுடன் நிற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் புல்வாமா தற்கொலை பயங்கரவாதி தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 44 பேர் பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குததலை நடத்திய பயங்கரவாதி ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதுபோல, இந்த கொடூர செயலுக்கு தாங்கள்தான் காரணம் என்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில்  இம்ரான்கான் அரசு அமைய உறுதுணையாக இருந்தது. அதுபோல அமைப்பின் தலைமையகமும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அனைத்துக் கட்சியினரும், இந்த விவகாரத்தில்  அரசியல் வேறுபாடின்றி ஒன்றுபட்டு செயல்படுவோம் என உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.   நாடு முழுவதும் உள்ள  அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில்  அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி  மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து, உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்  விரிவாக எடுத்துக் கூறினார். இந்த விவகாரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக,  எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என ஆலோசனைகளை கோரினார்.  ஒவ்வொரு கட்சியினரும் அவர்களது கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில்,  மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

அதைத்தொட்ர்ந்து,  எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாகவும்,  பயங்கரவாதத் துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுமையுடன் நிற்கிறோம் என்றும்  அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில்,

‘இந்திய எல்லையின் மறுபுறத்தில் உள்ள சக்திகளால் பயங்கரவாதம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெரும் சவாலான இந்த பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா நிலையான எதிர்நிலைப்பாட்டை கையாண்டு வருகிறது.

இந்த சவால்களை எதிர்கொண்டு போராடி வெல்ல ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் சபதமேற்கிறோம். அனைத்து வகைகளிலான பயங்கரவாதம் மற்றும் எல்லையின் மறுபகுதியில் இருந்து பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நமது பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, உறுதுணையாக நிற்போம்’.

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.