டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று சவாலை எதிர்த்துப் போராடுவதிலும், அதை முறியடிப்பதிலும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம் என்று என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கடிதம் எழுதி உள்ளார்.

வயநாடு தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த ஆலோசனைகளை வழங்கி 3 பக்க கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ‘இந்த மிகப்பெரிய சவாலை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம்’ . நமது நாட்டில் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். பொருளாதார ரீதியாக முடக்கப்படுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் நாங்களும் இணைந்து நிற்போம்,

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நடத்தப்பட்டு சோதனைகளின் எண்ணிக்கையை வியத்தகு முறையில் அதிகரிக்க வேண்டும். மேலும், அதிக மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில், கொரோனா நோயாளிகளுக்காக பெரிய பிரத்யேக மருத்துவமனைகள் தேவைப்படும்; ஆயிரக்கணக்கான படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படும், அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று  தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்த நிவாரண நிதி அறிவிப்புக்கு,   மத்தியஅரசு சரியான திசையில் செல்ல தொடங்கி உள்ளதின் முதல்படி என்று ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.