சென்னை: நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது என்று, சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்நீட் தேர்வு தொடர்பாக திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இது தொடர்பான விவாதத்தின்போது,  அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் என்றார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தர விட்டார்.

இதையடுத்து, சட்டமன்ற வளாகத்தில் செய்தியளார்களை சந்தித்த கே.ஆர்.ராமசாமி உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள்,  நீட் தேர்வு தொடர்பான கவனஈர்ப்பில் பேச காங்கிரஸ் உறுப்பினர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியதுடன்,  காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர்.

சபையில் அதிமுக உறுப்பினர் ,  இன்பதுரை பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்தோம். திமுக-காங்கிரஸ் கூட்டணியை அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை விமர்சித்ததால் பிரச்சனை எழுந்தது.

நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. மத்திய அரசை எதிர்க்க அதிமுக அரசு  அஞ்சுகிறது.  நடவடிக்கைக்கு பயந்து நீட் பற்றி பேச ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். அனைத்து அமைச்சர்களும் ஊழலில் சிக்கியுள்ளதாகவும் ராமசாமி குற்றம்சாட்டினார்.