சென்னை:

திமுக செயற்குழுவில், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம்,  உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி  உள்பட  6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு  தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில், திமுக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

2) மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும். மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

3) தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

4) இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அ.தி.மு.க அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

5) இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம்.

6) அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டி அ.தி.மு.கவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் எனத் தீர்மானம்.

உள்பட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.