டில்லி:
நாங்களும் ரிலையன்ஸ்க்கு இணையான கட்டண சலுகை வழங்குவோம் என பிஎஸ்என்எல் தலைவர்  அனுபம் ஸ்ரீவத்சவா  அதிரடியாக அறிவித்து உள்ளார்.

அனுபம் ஸ்ரீவத்சவா
BSNL தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா

உலகிலேயே குறைந்த டேட்டா கட்டணத்தில் 4ஜி இண்டர்நெட் சேவையை `ரிலையன்ஸ் ஜியோ` அறிவித்திருக்கும் நிலையில் அடுத்த ஒரு ஆண்டில் மொபைல் அழைப்புகள் மற்றும் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் 10 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சர்வதேச தரவரிசை நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், `ரிலையன்ஸ் ஜியோ` வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ன் தலைவரும், தலைமை மேலாண் இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
இந்திய தொலைதொடர்பு சந்தையில் `ரிலையன்ஸ் ஜியோ`வின் வருகை மற்ற அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.
எனினும், போட்டியாளர்களுக்கு இணையாக கட்டணச் சலுகையில் சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் இயலும்.
சவால் என்று வரும்போது பி.எஸ்.என்.எல். எப்போதும் அதை சமாளிக்கும் வலுவுடன் இருந்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக கட்டண சலுகைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல் போட்டியாளராக விளங்கும்.
குறிப்பாக, ஏற்கனவே லேண்ட்லைன், ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்கில் வலுவாக இருப்பதால் புதிதாக முதலீடு செய்து சலுகைகளை வழங்க வேண்டிய நிலை பி.எஸ்.என்.எல்-க்கு இல்லை.
தொலைதொடர்பு சந்தையில் நீடித்து இருக்க ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் சேவை வழங்குவதை விட வேறு வழியில்லை.
நிறுவனங்களுக்கு இது சவாலாக இருப்பினும் மக்களுக்கு இந்த போட்டியின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைக்கும்.
இவ்வாறு அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்