சென்னை: நாகர்கோவில் – மும்பை இடையே வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய, மாநிலஅரசுகள் வழங்கி வரும் தளர்வுகள் காரணமாக, பல ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தற்போது நாகர்கோவில் – மும்பை இடையே வாரத்தில் 4நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அதற்கான முன்பதிவு தொடங்குவதாகவும்  தெற்கு ரயில்வே  தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்குரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாகர்கோவில் – மும்பை இடையே, வண்டி எண். 06340/ 06339 ஆகிய எண்களில் இந்த சிறப்பு ரயில் வாரத்தில் நான்கு நாள்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த ரயிலில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, நான்கு ஏசி மூன்று அடுக்கு பெட்டி, 10 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பொதுவகுப்பு பெட்டிகளுடன், சிற்றுண்டியகம் (பேண்ட்ரி கார்) மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

06340 என்ற எண்ணிலிருந்து நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மறுநாள் மாலை 07.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

அதேபோல், 06339 என்ற எண்ணிலிருந்து மும்பையிலிருந்து செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 08.35 நிமிடங்களுக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், பாகலா, மதனபள்ளி, கதிரி, தர்மாவரம், அனந்தபூர், குண்டகல், அதோனி, மந்திராலயம், ராய்ச்சூர், யாத்கிர், வாடிஸ கலாபுரகி, சோலபூர், குர்துவாடி, தாவூர், புணே, கல்யாண், தானே, தாதர் ஆகி.ய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், நாமக்கல், கர்ஜாத் ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவ. 28) தொடங்கியுள்ளது.

இதேபோல் திருச்சி – ஹவுரா இடையே வாரம் இருமுறை இயங்கி வரும் சிறப்பு ரயில், சென்னை செண்டரல் – பெங்களூரு டபுள் டக்கர் ரயில், சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் ரயில், சென்னை செண்டரல் – சப்ரா ஆகிய ரயில்களில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.