இரண்டு நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய விமானி அபிநந்தனுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். அவரை வரவேற்று #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் இன்று ட்ரெண்டாகியுள்ளது.
கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானத்திற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால் அந்நாடு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இதனால் இருநாடுகளில் இடையே பதற்றம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் போர் மூளும் சூழல் உருவானது. இந்நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இருநாடுகளுக்கிடையே சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. மத்திய அரசும் அபிநந்தனை பாதுகாப்பாக மீட்க முயற்சிகளை மேற்கொண்டது. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இதையடுத்து உலக நாடுகளின் அழுத்தத்தின் பேரில் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அதன்படி, ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து கார் மூலம் அட்டாரி வாகா எல்லைக்கு அழைத்து வரப்படுகிறார். அந்நாட்டின் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த நிலையில் 9 மணியளவில் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். எல்லையில் தாய் மண்ணில் கால் வைத்த அபிநந்தனை அங்கு கூடியிருந்த மக்கள் கைத்தட்டி வரவேற்றனர். இதனை தொடர்ந்து தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், தலைவர்கள், நெட்டிசன்கள், நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அபிநந்தன் பிடிபட்டதில் தொடங்கி, விடுவிக்கப்பட்டது வரை ட்விட்டர் தளத்தில் அவருடைய பெயர் #Abhinandan ட்ரெண்ட்டாகி கொண்டே இருந்தது. தற்போது அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதன் மூலம் உலகளவில் கவனம் ஈர்க்கப்பட்ட நபரமாக அபிநந்தன் மாறியுள்ளார்.
இதற்கிடையே இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள், ஆளுநர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவருமே #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய வாழ்த்தை பகிர்ந்த வண்ணமுள்ளனர். அவற்றின் ஒருசில பதிவுகள்:
பிரதமர் மோடி:
வீடு திரும்பிய விங் கமெண்டர் அபிநந்தன் வருக
உங்களின் முன்மாதிரியான துணிச்சலால் தேசமே பெருமைக் கொள்கிறது
130 கோடி மக்களுக்கு நமது ராணுவம் உத்வேகம் தருகிறது
வந்தே மாதரம்!
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
அபிநந்தன் இளைஞர்களுக்கு முன்னுதாரணம்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி:
இந்தியாவின் நாயகன் வீடு திரும்புகிறார். இந்த தேசம் அவரை, அவர் குடும்பத்தை, இந்திய விமானப் படையை, இந்தியாவின் தலைமையை மற்றும் இந்திய அரசை மொத்தமாக வணங்குகிறது.
பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங்:
அபிநந்தன் வர்த்தமானை முழுமனதாக வரவேற்கிறேன். நேரே சென்று அவரை வரவேற்பதை நான் விரும்பினாலும் பாதுகாப்பு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. உங்களை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன் ஆபிசர். #WelcomeHomeAbhinandan
அகிலேஷ் யாதவ்:
விங்க் கமாண்டர் அபிநந்தன் அவர்களை தாயகத்துக்கு வரவேற்பதை எதிர்நோக்கியுள்ளேன். தைரியமான நமது தியாகிகள் மற்றும் குடும்பங்களின் தியாகங்களை நம்மால் மறக்கவே முடியாது. உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாத அமைப்புகளை களைவதை பாகிஸ்தான் பேச்சிலிருந்து செயலுக்குக் கொண்டு வர வேண்டும். அமைதி நிலவும் என நம்புகிறேன்.
முகமது கைஃப்:
#WelcomeHomeAbhinandan கடினமான சூழலில் கண்ணியத்துடன், நயத்துடன், தைரியமாக நீங்கள் நடந்துகொண்டது பெருமையாக உள்ளது. நீங்கள் வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.
வீரேந்தர் சேவாக்:
நீங்கள் எங்களுடன் இருப்பதில் எங்களுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா. உங்கள் திறமைகளை வணங்குகிறேன். உங்கள் வலிமை மற்றும் தைரியத்துக்கும். #WelcomeBackAbhinandan . நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்களால் எங்களுக்குள் பெருமை நிறைந்துள்ளது. #WeAreSupposedToTellYouThis
வி.வி.எஸ்.லட்சுமண்:
ஒட்டுமொத்த தேசமும் உங்கள் சுயநலமின்மை, தைரியம் மன உறுதியால் பெருமைகொண்டுள்ளது. #WelcomeHomeAbhinandan
ரிஷப் பந்த்:
வரவேற்கிறோம் அபிநந்தன் அவர்களே. நம் தேசம் மொத்தமும் உங்கள் சுயநலமின்மை மற்றும் மனதைரியத்தைக் கண்டு பெருமைபடுகிறது. உங்களை வணங்குகிறோம். ஜெய்ஹிந்த். #WelcomeHomeAbhinandan
ப்ரீத்தி ஜிந்தா:
65 வருட பழைய ரஷ்யாவின் மிக்21 விமானம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்ட எஃப்15 விமானத்தை இந்தியா பாக் எல்லையில் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது விமானி பயிற்சியைப் பற்றி நிறைய சொல்கிறது. சிறந்த விமானி ஓட்டுவதுதான் சிறந்த விமானம். #WelcomeHomeAbhinandan #RealHero #IndianAirForce #JaiHind
தியா மிர்சா:
வீடைப் போல வேறு சிறந்த இடம் கிடையாது. விங் கமாண்டர் அபிநந்தனுக்கு எங்கள் அன்பு, மரியாதை மற்றும் நன்றி. #WelcomeHomeAbhinandan #Peace #UnitedForPeace #SayNoToWar
தமன்னா:
உங்கள் அமைதி மற்றும் பொறுமைக்கு தலை வணங்குகிறோம் அபிநந்தன். நீங்கள் எப்போதும் தைரியமாக இருந்தீர்கள். #WelcomeHomeAbhinandan
ஹன்சிகா:
இந்த மனிதரின் மன தைரியத்துக்காக தலை வணங்குங்கள். #WelcomeHomeAbhinandan
சித்தார்த் மல்கோத்ரா:
#WelcomeHomeAbhinandan நீங்கள் நிஜ நாயகர். ஒரு தேசமாக நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். சுயநலமற்ற உங்கள் சேவைக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.
ரவீனா தண்டன்:
நமது நாயகன் வீடு திரும்புவதைப் பார்க்க தொலைக்காட்சி திரையை விட்டு கண்கள் அகலவில்லை. அவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நீங்கள் அமைதியாக இருந்த விதம், மரியாதைக்குரிய வகையில் நடந்து கொண்ட விதம் இதையெல்லாம் பார்க்கும்போது உங்கள் தைரியத்தைப் பற்றித் தெரிகிறது. அவ்வளவு பெருமையாக உணர்கிறேன். வரவேற்கிறோம் விங் கமாண்டர். #WelcomeHomeAbhinandan.
பிரகாஷ்ராஜ்:
#WelcomeHomeAbhinandan #Abhinandancomingback. அரசியல்வாதிகள் அரசியலாக்கட்டும். ஊடகங்களை கூரைக்கு மேல் ஏறி நின்று அலறட்டும். ஆனால் குடிமக்களாக நாம் ஒற்றுமையுடன் நின்று நமது நாயகனை வரவேற்போம்.
ஜோதிமணி:
தாயகத்துக்கு வரவேற்கிறோம் நாயகனே. உங்கள் வலிமை, அமைதி, கண்ணியம் மற்றும் நயத்தின் மூலம் ஒட்டு மொத்த தேசத்தையும் ஈர்த்த ஒருவராக உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். தேசபக்தி என்ற வார்த்தை இறந்துவிடவில்லை என்பதை காட்டிவிட்டீர்கள். வணக்கங்கள். #WelcomeHomeAbhinandan
கெளதம் அதானி:
ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரிடமும் இருக்கும் தைரியம், அமைதி மற்றும் அர்ப்பணிப்பை இந்தியா மற்றும் உலகத்திலுள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. . #WelcomeHomeAbhinandan