பெங்களூரு

மோடி கேர் என அழைக்கப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய மேற்கு வங்க அரசும், கர்னாடக அரசும் மறுப்பு தெரிவித்துள்ளன.

இந்த மாதம் 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு மிகப் பெரிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது.   ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அழைக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மோடி கேர் என பெயர் சூட்டப்பட்டது.   வரும் சுதந்திர தினத்தன்று இத்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப் படும் என அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டத்தில் சேரப் போவதில்லை என ஏற்கனவே கூறி இருந்தார்.   மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே இது போல மருத்துவக் காப்பிடு திட்டம் உள்ளதால் தமது மாநிலம் இந்த திட்டத்தில் சேராது என அறிவித்திருந்தார்.   தற்போது கர்னாடகா அரசும் இந்த மோடிகேர் திட்டத்தில் இணைய மறுத்துள்ளது.  கர்னாடகாவில் ஏற்கனவே இது போல திட்டம் செயல்படுவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.