டெல்லி:

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ள நிலையில், இது மரியாதை  நிமித்தமான சந்திப்பு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடியின் ஆட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா குறித்தம் கடுமையாக விமர்சித்து வருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. சமீபத்தில் சந்திரயான் குறித்து பிரதமர் மோடி பேசியதையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தினார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில், நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்ததும், அப்போது அவருக்கு சேலை பரிசளித்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், மோடியுடனான சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

மோடியை சந்தித்த மம்தா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும், மேலும் நவராத்தி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, மோடிக்கு வழக்கம்போல  குர்தா பெங்காலி இனிப்பு வகைகளை பரிசாக வழங்குகியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அவர்களது சந்திப்பின்போது, மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது தொடர்பாக விவாதித்தாக மேற்கு வங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, கல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்பைட அமைத்து தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அது தொடர்பாகவும் மோடியிடம் பேசியதாகவும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜிவ் குமார் கைது செய்யப்பட்டால், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தம் என்பதும் மறுக்க முடியாது. இந்த நிலையில்தான் மோடியை மம்தா சரணடைந்து இருப்பதாக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன மோசடியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.