கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதை, இனப்படுகொலை என்று வர்ணித்துள்ளார் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தின் கூச்பெஹாரில், நேற்று நடைபெற்ற 4ம் கட்ட தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் சுட்டதில், 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஆவேசமடைந்துள்ள மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது, “இது ஒரு  இனப்படுகொலை நடவடிக்கை. புல்லட்களை அவர்கள் வீசியுள்ளனர். காலிலோ அல்லது உடம்பின் கீழ் பகுதியிலோ சுட்டிருக்கலாம். ஆனால், கழுத்து அல்லது நெஞ்சு பகுதிகளை புல்லட் தாக்கியுள்ளது.

திறமையற்ற பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ள திறமையற்ற அரசு இந்த மத்திய அரச. மேற்கு வங்கத்தைப் பிடிக்க அவர்கள் தினமும் வருகின்றனர். உங்களை வரவேற்கிறோம். உங்களை தடுக்கவில்லை. ஆனால், நீங்கள் மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்” என்றுள்ளார் மம்தா.