கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் திகழ்கிறார்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பெரும் பாதிப்பாக அமைகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். கொரோனா தொற்று காலத்தில்  மக்களுக்காக உழைக்கும் அனைத்து காவல்துறையினருக்கும் மரியாதை செலுத்த செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: உ.பி, மத்திய பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் டெல்லியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். மற்ற மாநிலங்களின் போலீசாருடன் ஒப்பிடும்போது மேற்கு வங்க காவல்துறை மற்றும் கொல்கத்தா காவல்துறை சிறந்தவை. கொல்கத்தா காவல்துறை முன்பு ஸ்காட்லாந்து யார்டுடன் ஒப்பிடப்பட்டது, இப்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்கிறார்கள் என்று கூறினார்.