கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். இரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 621 ஜில்லா பரிஷத்களில் திரிணமுல் 361 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றது

6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 4 ஆயிரத்து 430 இடங்களிலும், பாஜக 385 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘‘நாங்கள் 90 சதவீத இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளோம். மாநிலத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் எங்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.