புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான ‘மந்தை எதிர்ப்பாற்றல்’ நிலை, இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மந்தை எதிர்ப்பாற்றல் என்பது, ஒரு சமூகத்தில் வாழும் மக்கள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களில் 70% முதல் 90% வரையிலான நபர்களுக்கு அந்த நோய்க்கான உள்ளார்ந்த எதிர்ப்பாற்றல் ஏற்படுவதை குறிப்பதேயாகும்.
ஆனால், தற்போதைய சூழலில், இந்தியாவில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலை எவ்வாறு அமையும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. அதாவது, எத்தனை நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால், நாம் மந்தை எதிர்ப்பாற்றலை அடைவோம் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
பல தொற்றுநோய் நிபுணர்கள், அந்த எண்ணிக்கையானது, மக்கள் தொகையில் 60% பேர் என்பதாக இருக்கும் என்கிறார்கள். மேலும், நாட்டின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறு காலக்கட்டங்களில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலையை அடையும் என்றும் கூறப்படுகிறது.