சென்னை:

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் மற்றும், வழங்கமாக திங்கட்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அகில இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசுகள் புதிய நலத் திட்டங்களை அறிவிக்க கூடாது. ஆனால்,  ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்களுக்கு தடையில்லை.

அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.

பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது விதி. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.

அரசு விழாக்கள் நடத்த கூடாது. அமைச்சர்கள் என்ற முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்க கூடாது.

வாக்குச் சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.

வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.

கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.

மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.

மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.

அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.