டில்லி :
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சிக் கொடுக்க பயிற்சியாளர்கள் தேவை என அறிவித்துள்ள பிசிசிஐ, தேர்வு செய்யப்பட உள்ள பயிற்சியாளர்களுக்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதையும் தெளிவாக வெளியிட்டு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு, தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர் , மற்றும் நிர்வாக மேலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நியமனங்களில் பிசிசிஐ முடிவே இறுதியானதாகும் என்றும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 30.7.2019 மாலை 5 மணி ஆகும் என்று தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் உலக கோப்பைத்தொடரின்போது, இந்தியஅணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், அணியின் உடலியக்க நிபுணர் பேட்ரிக் பர்ஹார்ட், பயிற்றுநர் சங்கர் பாசு ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்
தற்போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு வரும் ஆக. 3-ம் தேதி தொடங்கும் மே.இ.தீவுகள் தொடர் முடியும் வரை 45 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பதையும் பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.‘
புதிய தலைமைப் பயிற்சியாளர் 60 வயதுக்குள்ளும், குறைந்தது 2 ஆண்டுகள் சர்வதேச அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
டெஸ்ட் மேட்ச் ஆடும் அணிக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி அளித்திருக்க வேண்டும். மேலும் 30 டெஸ்ட்கள் அல்லது 50 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும்.
கடந்த 2017-இல் அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்த நிலையில் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்திய கிரிக்கெட்டின் இயக்குநராகவும் 2014 முதல் 2106 வரை பதவி வகித்தார் சாஸ்திரி.
அவரது தலைமையில் பெரிய போட்டி எதையும் இந்திய அணி வெல்லவில்லை. எனினும் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா.