இந்திய அணியின் மிடில் ஆர்டரில் எதனால் ரஹானேவை எதனால் சேர்க்கவில்லை என்றும், ரிஷப் பண்ட்டிற்கு தொடக்கத்திலிருந்தே ஏன் அணியில் இடம் தரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் ஜக்தேல் (Sanjay Jagdale).

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அணி வீரர்கள் களமிறக்கப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்தியா தோல்வியை சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  கடந்த 2003 உலகக்கோப்பை மற்றும் 2007 50 ஓவர் மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கமிட்டியில் அங்கம் வகித்தவரும், பிசிசிஐ அமைப்பின் செயலராகவும் பதவி வகித்தவருமான சஞ்சய் ஜக்தேல் கூறியிருப்பதாவது,

“நாக்-அவுட் போட்டிகளின் அழுத்தம் வித்தியாசமானது. ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாக வைத்து உலகக்கோப்பை போட்டிக்கான வீரர்களை தேர்வுசெய்தல் கூடாது. இந்தியாவிற்கு வெளியே யார் சிறப்பாக விளையாடி நிரூபித்துள்ளார்களோ, அதன் அடிப்படையில்தான் அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்.

ராஹானே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டவர். உலகக்கோப்பை போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்பே அணியில் இணைக்கப்பட்டு, போட்டிகளில் விளையாட வைக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நாங்கள் அவ்வாறுதான் செய்தோம். மேலும், கேப்டன், அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடையே நல்ல ஆரோக்கியமான கலந்துரையாடல் நிகழ வேண்டும். தினேஷ் கார்த்திக் மற்றும் ராயுடு போன்றோருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டாகி விட்டது.

மணிஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் தேர்வு செய்யப்படாதது துரதிருஷ்டமே. பொருத்தமற்ற வீரர்களை அணி நிர்வாகம் ஆதரித்தது. வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். இளம் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அவகாசம் தந்து அவர்களை மெருகேற்ற வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.