சென்னை:
கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ஊரடங்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் கோயில் கள், தொழிற்சாலைகள், வியாபாரத் தலங்கள் திறக்கப்படாத நிலையில், டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன?. ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயை கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மேலும், மதுப்பிரியர்களின் குடும்பத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கவும், குடும்ப வன்முறைகள் பெருகவும் டாஸ்மாக் கடைகள், காரணமாக அமைந்துவிடும். ஆதார் அட்டை வைத்திருக்கும் நபருக்கு ஒரு மது பாட்டில் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், ஏராளமான மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் வாங்கிச் செல்வதை பார்க்கமுடியும்.
கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் ஏழை மக்களின் வருவாய் பாதிக்கப்படும் நிலையில், அரசுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது. இது கண்டிக்கத்தக்க ஒன்றாக பார்க்கிறேன். ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. மதுக்கடைகளை திறக்கவேண்டும் என யாரும் கோரிக்கை விடுக்காத பட்சத்தில், அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அவசியம் என்ன? என்று அனைவரிடத்திலும் கேள்வி எழும்புகிறது.
எனவே தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா என்றும் எண்ணத்தோன்றுகிறது. மேலும், கடந்த 43 நாள்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு, மதுபானக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.