புதுடெல்லி: அதிரடி துவக்க வீரர் ரோகித் ஷர்மாவின் வளர்ச்சியில், மகேந்திர சிங் தோனியின் பங்கு முக்கியமானது என்றுள்ளார் முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர்.
இதுகுறித்து கம்பீர் கூறியதாவது; ரோகித் ஷர்மா, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவர். தோனியின் ஆதரவே இதற்கு காரணம். ஒரு அணியில் கேப்டனின் ஆதரவு இருந்தால், நிலைமையே வேறு. என்னதான், தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்தின் ஆதரவு கிடைத்தாலும், கேப்டனின் ஆதரவு இல்லையென்றால் வீண்தான்.
ரோகித் ஷர்மா அளவிற்கு, வேறு எந்த வீரரை தோனி ஆதரித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ரோகித்தை அவர் ஒருபோதும் ஒதுக்கியதில்லை. சீனியர் வீரர்களால் ஒருவர் உருவாக்கப்படுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். எனவே, ரோகித் ஷர்மா, இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
ரோகித் ஷர்மா – விராத் கோலியை ஒப்பிடுவது கடினம். ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்றுள்ளார் கம்பீர்.