சேலம்: 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் (TET ) தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

சேலம் அருகே உள்ள தருமபுரியில், ஆசிரியர் சபரிமாலா தலைமையில்  நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்ட  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்துதகவல் அறிந்த திமு கதலைவர் மு.க. ஸ்டாலின், போராடும் ஆசிரியர்களின் கோரிக்கை தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த 80,000 ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள்.

ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்து, பணி வழங்கிடக் கோரி NEET-ஐ எதிர்த்துப் பணி விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் போராடுகிறார்கள்!

போராட்டத்தைக் கைவிடுக; திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேறும்!  என உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள்.

அவர்களின் தகுதித்தேர்வுச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ‘நீட் தேர்வுக் கொடுமையால் மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து’ பணியிலிருந்து விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதியினை அளிக்கிறேன்; போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.