வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியிடம் தோற்று விடுவேன் என்று எப்போதுமே மனதால் அஞ்சியதில்லை என்றும், அப்படி ஒரு அச்சம் வரும் நாளில், அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி.

வாரணாசியில் மோடியை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை எனக் கேட்கப்பட்டதற்கு, “தற்போது நான் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறேன். அனைத்து தொகுதிகளிலும் சுற்றி சுழன்று வருகிறேன்.

வாரணாசி தொகுதியில் போட்டியிடலாமா? என தொண்டர்களிடம் கேட்டதற்கு, அப்படி செய்தால் நீங்கள் வாரணாசியிலேயே முடங்க நேரிடும் என அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்” என்றார்.

கடந்த 2014 தேர்தலில், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட பயமா? எனக் கேட்டதற்கு, பெரிதாக சிரித்த அவர் பின்னர் கூறியதாவது, “நான் எப்போதுமே தோல்வி குறித்து அஞ்சியதில்லை. அப்படி ஒருநாள் எனக்கு தோல்வி குறித்த பயம் வந்ததென்றால், அப்போது அறைக்குள் சென்று, என்னை நானே அங்கு சிறைவைத்துக் கொள்வேன்” என்று பதிலளித்தார்.