சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர்  மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது,   மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, கொரோனா நோய்த் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில், தற்போது பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்கள், மால்கள், கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது,  மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பொழுதுபோக்க அனுமதிக்கப்படுகின்றனரா? என நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேநேரம் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.