பிரியாணி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை மற்றும் மனம் மட்டுமல்ல அந்த ஊரின் அடையாளமாகவும் இருக்கிறது.

சுவையான பிரியாணி, விலை மலிவான பிரியாணி என்று எது எங்கு கிடைக்கும் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும், உலகிலேயே மிக விலை உயர்ந்த பிரியாணி எங்கு கிடைக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

துபாயில் உள்ள ‘பாம்பே பரோ’ எனும் நட்சத்திர சொகுசு விடுதியில் தான் உலகின் விலையுயர்ந்த பிரியாணி விற்கப்படுகிறது இதன் விலை 1000 திராம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 19,700 ரூபாய்.

துபாய் சர்வதேச நிதி மையத்தில் (Dubai International Financial Centre – DIFC) உள்ள ஆங்கிலேயர் காலத்து பங்களாவில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் கிடைக்கும் இந்த பிரியாணிக்கு ராயல் கோல்ட் பிரியாணி என்று பெயர்.

பிரியாணி என்று நாம் கேட்ட மாத்திரத்தில் வந்து விடாது இந்த ராயல் கோல்ட் பிரியாணி, ஆர்டர் செய்து 45 நிமிடம் கழித்துதான் நம் மேஜைக்கு வரும்.

தங்கத்தாம்பாளத்தில் மூன்று கிலோ அளவுக்கு கொண்டுவரப்படும் இந்த ராயல் கோல்ட் பிரியாணியில் சிக்கன் பிரியாணி, கைமா பிரியாணி, குங்குமப்பூ பிரியாணி என்று மூன்று வகையான குஸ்காவுடன், மலாய் சிக்கன், சிக்கன் மீட் பால்ஸ், ராஜ்புட் கோழி கறி தவிர, மட்டன் சாப்ஸ், மட்டன் ஷீக் கபாப் என்ற மாமிச வகைகளும், அவித்த முட்டை மற்றும் வித விதமான பச்சடி, இனிப்பு வகைகளும் பரிமாறப்படுகிறது.

இந்த ராயல் கோல்டு பிரியாணியில் 20000 ரூபாய்க்கு அப்படி என்ன உள்ளது என்று கேட்பவர்களுக்கு…. ‘கோல்டு’ என்பது இந்த பிரியாணியின் பெயரில் மட்டுமல்ல இந்த பிரியாணியிலும் தங்கம் கலந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு, உணவாக சாப்பிடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 23 கேரட்டினாலான ‘தங்க காகிதம்’ இதன் மீது தூவினார் போல் போர்த்தப்பட்டு பரிமாறப்படுவது இந்த பிரியாணியின் சுவையை மட்டுமல்ல அதன் மதிப்பையும் கூட்டுகிறது.

துபாய்க்கு சென்று தகதகக்கும் இந்த பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு தான் இதன் சுவையும் மனமும் என்னவென்று தெரியும்.

நமக்கு தெரிந்ததெல்லாம் அதிகாலை பாயா பிரியாணி, ஹைவேஸ் அசல் பிரியாணி, ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி பிரியாணி மட்டும் தான்.