சண்டிகர்:

நாடு முழுவதும் வரும் 19ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு விவசாயி ஒருவரின் டிராக்டரை வாங்கி ஓட்டி மகிழும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7வது கட்ட வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த வாக்குப்பதிவானது பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேஷ், பஞ்சாப், மேற்குவங்கம், சண்டிகர், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த  59 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது விவசாயி ஒருவரிடம்  இருந்து டிராக்டரை வாங்கி விவசாய நிலத்தில் ஓட்டி மகிழ்ந்தார். அவருடன் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் டிராக்டரில் பயணம் செய்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ( ‘kisan budget’) , விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பபடாது. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு விவசாயிகள் நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், ராகுல்காந்தி விவசாயியாக மாறி டிராக்டர் ஓட்டியது விவசாயிகளிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகுல் டிராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..