மும்பை: மராட்டியமும் மும்பை நகரமும் மராட்டியர்களுக்கே என்று இனவாத கோஷத்தை முன்வைத்து அரசியல் செய்துவரும் தாக்கரே குடும்பத்தினரின் பூர்வீகம் பீகார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பத்திரிகையாளர் தாவல் குல்கர்னி என்பவர் எழுதியுள்ள ‘த கசின்ஸ் தாக்கரே: உத்தவ், ராஜ் அண்ட் த ஷேடோவ் ஆஃப் தெயர் சேனாஸ்’ என்ற புத்தகத்தில் அந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

தனது கருத்துக்கு ஆதரவாக, பால் தாக்கரேவின் தந்தை பிரபோதன்கர் தாக்கரே எழுதிய புத்தகத்திலிருந்து ஆதாரத்தை எடுத்துக் காட்டியுள்ளார். அந்தப் புத்தகம் சில விஷயங்களை ஐயத்திற்கு இடமில்லாமல் குறிப்பிட்டுள்ளது.

தாக்கரேக்கள் சார்ந்துள்ள சமூகமான சந்திரசேனிய கயஸ்தா பிரபு சமூகம், பண்டைய மகத அரசிலிருந்து வெளியேறி பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததாகும். வட்டிக் கொடுமை தாங்காமல் இச்சமூகம் இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வெளியேறி சிகேபி சமூகத்தினர், போர் வீரர்களாகவும் எழுத்தர்களாகவும் பணியாற்றினர். இதன்மூலம் வெளியிலிருந்து மும்பையில் குடியேறியவர்களுக்கு எதிரான தாக்கரேக்களின் அரசியலே கேள்விக்குள்ளாகிறது.

மேலும், இந்தப் புத்தகமானது உறவினர்களாகிய உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரிடையே தொடக்கம் முதலே நிலவிய அரசியல் போட்டியையும் எடுத்துக் காட்டுகிறது.

வேலையில்லா இளைஞர்களை திரட்டி, கடந்த 1993ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது ராஜ் தாக்கரே போராட்டம் நடத்திய நிகழ்வும் உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.