டில்லி

கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கி உள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகின்றன,  இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் கண்டுபிடிப்பான கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இதில் பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் கோவாக்சின் மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையின் கீழ் உள்ளது.   எனவே இந்த மருந்துக்கு கடும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் தங்களது தயாரிப்பான கோவாக்சின் ஊசியை யார் போடக் கூடாது என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.,

அந்த அறிக்கையின்படி, “கோவாக்சின் தடுப்பூசியை முழு உடல் நலத்துடன் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.  அதே வேளையில் இரத்தப் பெருக்கு போன்ற கோளாறு உள்ளவர்களும் இரத்தம் உறையாத நிலை உள்ளவர்களும் அவசியம் போட்டுக் கொள்ளக்கூடாது.  அத்துடன் தொடர் உடல்நலக்கேடு, ஜுரம், ஒவ்வாமை, கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோர் போட்டுக் கொள்ளக் கூடாது.,

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் இதை உடனடியாக பரிசோதனை அறிக்கையுடன் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நடைபெற அதிக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டாலும் இதைப் பதிவு செய்தாக வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.  மேலும் ஏற்கனவே எச் ஐ வி போன்ற கடும் தொற்று உள்ளோர், புற்று நொய் உள்ளோர், குறிப்பாக கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வோர் போட்டுக் கொள்ளக் கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு இந்த ஊசியால் ஏதாவது கடும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதாக பாரத் பயோடெக் அறிவித்திருந்தது.  அதே வேளையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வோர் இது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளதை அறிந்து கொண்ட பிறகும் தடுப்பூசியை ஒப்புக் கொள்வதாக உறுதி மொழி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.