விஜயவாடா

ரசு அளித்துள்ள நிதிக்கான கணக்கு வழக்குகளை கேட்க அமித் ஷா யார்? என ஆந்திர முதல்வர் வினா எழுப்பி உள்ளார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்ததை ஒட்டி அமராவதி என்னும் புதிய தலைநகரம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த புதிய தலைநகர கட்டமைப்புக்காக மத்திய அரசு நிதி உதவி வழங்கி உள்ளது.  இந்த நிதி உதவி பற்றாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம்  மேலும் நிதியை கோரினார்.

இதற்கு பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா “சந்திரபாபு நாயுடு ஏற்கனவே மத்திய அரசு அளித்த நிதி உதவிக்கு சரியான கணக்கு வழக்கு ரசீதுகளை மத்திய அரசுக்கு அளிக்கவில்லை.   அப்படி இருந்தும் மேலும் நிதி உதவி தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.” என கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயவாடாவில் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.   இந்த மாநாட்டில் உரை ஆற்றிய சந்திரபாபு நாயுடு, “பாஜகவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் மட்டுமே அமித்ஷா இருக்கிறார்.  அப்படி இருக்க மத்திய அரசு அளித்துள்ள நிதிக்கு கணக்கு கேட்க இவர் யார்?  இது மிகவும் அத்து மீறிய செயலாகும்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் அல்லது நிதி அமைச்சகம் மட்டுமே கேள்விகள் கேட்க முடியும்.   ஆந்திர அரசு என்னென்ன கணக்கு தந்துள்ளது என்பது கட்சித் தலைவருக்கு எப்படி தெரியும்?  இது குறித்த அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில் அமித்ஷா இந்த விஷயத்தில் தலையிடுவது மிகவும் தவறானது” என கூறி உள்ளார்.