சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை, யாரென்றே தனக்குத் தெரியாது என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான தம்பிதுரை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கை, சசிகலாவுடன் இணைந்து செய்தவர் இவர். சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார் இவர்.

இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக ஏற்றுகொள்ள முடியாது. அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராக பொறுப்பு வகித்திருக்கிறார். அவரே மீண்டும் பொறுப்பேற்கலாம். அவரே அதிமுகவை வழி நடத்தலாம்” என்று தெரிவித்தார்.

இது சசிகலா தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரையிடம் இது குறிதது செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “’தீபக்கா?  தீபக் என்பவர் யார்? அவர் அ.தி.மு.க.வில் உள்ளாரா? அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறினார்.