ஜெனிவா: கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில், நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.

இந் நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: புதிய ஆராய்ச்சியின் அடிப்படையில், துணி முகக்கவசம் குறைந்தது 3 அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.

60 வயதை கடந்தவர்கள் அல்லது உடலில் கோளாறு உள்ளவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத இடங்களில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அசுத்தமான கைகளை கொண்டு சரி செய்வதோ அல்லது மீண்டும் கழற்றி மாட்டவோ கூடாது.

இதன் மூலம் தங்களுக்கு தாங்களே தொற்றை பரப்பிக் கொள்ளமுடியும்  என்பதை உணர வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் 3 அடுக்குகள் கொண்ட துணி முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.