இம்பால்,

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தரவில்லை. ஆட்சி அமைப்பதில் அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

எஞ்சிய இடங்களை இதர கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைக்க சிறிய கட்சிகளின் தயவை பாஜக எதிர்பார்த்திருக்கிறது. அதேநேரம் காங்கிரஸூம் ஆட்சியமைக்கும் முயற்சியை கைவிடவில்லை.

ஒரு இடத்தில் வென்றுள்ள திரிணாமுல் கட்சி காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே மணிப்பூர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சி.பி.ஜோசியும், மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதாலாவும் இன்று மணிப்பூர் சென்று பிரச்னைகளை ஆராயப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிப் பெற்றிருக்கும் பாஜக எம் எல் ஏக்களில் சிலர் காங்கிரஸூக்கு ஆதரவளிக்கப்போவதாக காங்கிரஸின்                                                                                                                                    நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.