சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்

தமிழகத்தில் இதுவரை   10,13,378  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,20,369  பேர் குணம் அடைந்த நிலையில்,  தற்போது 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அதிகபட்சமாக சென்னையில் நேற்று  கொரோனாவால் 3,711 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,005 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில்…நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கனா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசின் முடிவுக்கு தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவு தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையானது.  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தமிழகத்தைவிட தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும்போது, தமிழக தேவையை கருத்தில் கொள்ளாமல், மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “அவசர தேவைகளின் போது அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான் என்றும், மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன” என்று கூறினார்.

 மத்திய அரசின் இந்த முடிவால் தமிழகத்தில்  ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வைக்கும் நோக்கமாக இருக்குமோஎன்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.