சென்னை, செப். 28 –
ள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
tnec
உள்ளாட்சி தேர்தலில், பழங்குடியினருக்கான சுழற்சி முறை இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நாளைக்குள் (29.9.2016) பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழக அரசு நிறைவேற்றி யுள்ள சட்டங்களில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவை முறையாக பின்பற்றப் படவில்லை என்பதால், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி பிறப்பிக்கப் பட்ட அரசாணையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் பின்பற்றப்படுவது ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடு முறையை இந்த தேர்தலில் நீட்டிப்பதற்கான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. சார்பாக தொடரப்பட்ட வழக்கில் வலியுறுத்தப் பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் இரா.கிரிராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து விட்டு, மறு நாளே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறு நாளே வேட்பு மனுத்தாக்கலை அறிவித்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பல மாவட்டங்களில் பழங்குடியினத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் வில்சன் வாதிட்டார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அளித்த பதிலில், விதிமுறைகளின்படியே மாநிலத் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்திருப்பதாக கூறினார்.
இதையடுத்து பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, நாளை (வியாழக்கிழமை)க்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.