டில்லி,

எதற்காக குடியரசு தினம், சுதந்திர தினங்களை கொண்டாட வேண்டும் என்று கட்ஜு கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியரசு, சுதந்திர தினங்களை நான் கொண்டாட மாட்டேன் என உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்து உள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் வலைதளத்தில்,  தான் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவு செய்திருப்பதாவது:-

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாட என்ன காரணம் இருக்கிறது இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? வேலையின்மை தீர்ந்து விட்டதா? நம் மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்கின்றார்களா, அவர்களுக்கு சுகாதாரம், சிறப்பான கல்வி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றதா?

எதுவுமே இல்லாத போது எதற்காக கொண்டாட வேண்டும்? அணிவகுப்பு மற்றும் கொடியேற்றுதல் உள்ளிட்டவை எதற்கு?

நம் நாட்டின் உச்சக்கட்ட வறுமை, ஏராளமானோருக்கு வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, எங்கும் ஊழல், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றிற்காக இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றதா?

1.25 பில்லியன் இந்தியர்களில் 75 சதவிகிதம் பேர் கடுமையான வறுமை, பாதிக்கும் மேற்பட்ட நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு,

ஏராளமானோருக்கு வேலையின்மை பிரச்சனை, தரமான கல்வியில்லை, சுகாதார சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பிறக்கும் முன்பே பெண் சிசுக்கள் அழிக்கப்படுவது, வரதட்சணை கொடுமை, கவுரவ கொலை, தற்கொலை, ஊழல் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இவ்விழாக்கள் கொண்டாடப்படுவதை மரியாதைக் குறைவாகவே கருதுகிறேன்.

இதுபோன்ற விழாக்களில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் நான் இதில் கலந்து கொள்வேன் என எதிர்பார்க்காதீர்கள்.

இதனை நீங்கள் மறுக்கலாம், ஆனால் இது தான் உண்மை. அறிவுப்பூர்வமாக இந்தியா ஜொலிப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் என்னால் அப்படி பார்க்க முடியாது.

எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் தரமான வாழ்க்கையை வாழும் போது நான் குடியரசு மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவேன்.

நான் இறந்த பின் இந்நிலை ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன், அப்போது வானத்தில் இருந்து எனது வாழ்த்துக்களை வழங்குவேன்.

இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.