டெல்லி:

காராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜக, அஜித்பவார் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், முன்னதாக இன்று அதிகாலையிலேயே குடியரசுத் தலைவர் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையில், கூட்டணியாக போட்டியிட்ட பாஜக, சிவசேனா இடையே அதிகாரப் பகிர்வில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டத. இதைத்தொடர்ந்து, என்சிபி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரே முயற்சி எடுத்து வந்தார்.

இதன் காரணமாக அங்கு ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வந்ததால், மாநிலத்தின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 12ந்தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  இந்த நிலையில்,  தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் – சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நேற்றிரவு முதன்முறையாக ஒரே இடத்தில் சந்தித்து, ஆட்சியமைப்பது குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருப்பார் என்றும்,  இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து விவரம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் – பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்த, பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்கும் வகையில், இன்று அதிகாலை  5:47 மணிக்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா அவசரம் அவசரமாக நடைபெற்றது. பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார். சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

பதவியேற்பைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ், “மகாராஷ்டிராவுக்குத் தேவை நிலையான அரசுதான். உப்புமா அரசு கிடையாது. சிவசேனா, மக்களின் தீர்ப்பை மதிக்கவில்லை. பாஜக-வுக்கு ஆதரவளித்துள்ள தேசியவாத காங்கிரஸுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்,” என்றார்

அஜித் பவார் பேசுகையில், “மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து, எந்தக் கட்சியும் ஆட்சி யமைக்க முடியாத சூழல் நிலவி வந்தது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. விவசாயப் பிரச்னை உட்பட. ஆகவேதான் நிலையான அரசை உருவாக்க நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்,” என்று தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது.

அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக சொல்லும் சிவசேனா, “நேற்றிரவு 9 மணி வரை அஜித் பவார் எங்களுடன் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தி விவாதம் செய்து வந்தார். திடீரென்று அவரைக் காணவில்லை. சந்திப்புகளின் போதும் எங்கள் கண்களைப் பார்த்து அவர் பேசவில்லை. என்னமோ தவறாக நடக்கிறது என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அவரை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.