முன்னாள் பிரதமர் இந்திரா காந்திமீது பிரதமர் மோடி வைத்த விமர்சனத்துக்கு ‘சித்ரலேகா” என்ற பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மோர்பி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது. “இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி தன் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். அது குறித்த புகைப்படம் ‘சித்ரலேகா’ இதழில் வெளிவந்தது எனக்கு நினைவிருக்கிறது.  ஆனால், நாங்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது” என்று பேசினார்.

பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு ‘சித்ரலேகா’ இதழே விளக்கம் அளித்திருக்கிறது.

அதில், “1979-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் பலியானார்கள். கால்நடை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியில் ஆங்காங்கே உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.

அப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்டு 16-ம் தேதி இந்திரா காந்தி, மோர்பி பகுதியைப் பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்தான் அவர் முகத்தை மூடிக்கொண்டார். அந்தப் படத்தை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி இதழில் நாங்கள் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்” என்று ‘சித்ரலேகா ‘இதழ் விளக்கம் அளித்துள்ளது.

“அந்தப் புகைப்படத்தில் இந்திராகாந்தி மட்டுமல்ல அனைவருமே மூக்கைப் பொத்தியிருப்பதையும் காண முடிகிறது.

சோம்நாத் கோயிலில்ல இந்துக்கள் அல்லாதவர் என்ற பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்  என்று பாஜகவினர் விமர்சனம் வைத்தனர். அது பொய் என்பதை கோயில் நிர்வாகமே தற்போது தெரிவித்துள்ளது.

அதே போல இந்திராகாந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதும் பொய் என்பது நிரூபனமாகியுள்ளது. இதுபோன்ற பொய்ப்பிரச்சாரங்களை பாஜகவினர்.. தவிர்க்கவேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.